ஆதனூர்சோழன் கவிதைகள் – 3

வாகைப்பூ

நான் எப்போதும் விழித்திருக்கிறேன்.

விழியுறங்கும் வேளையிலும்
உணர்வுகள் விழித்திருக்க
கனவுகளில் உலவுகிறேன்.

பகலைக் கடந்து இரவுக்குள்
நான்நுழையும் சமயமெல்லாம்
கொடிய அரக்க உள்ளங்கள்
கொதிக்கின்ற உலையாகி
என்னைக் கவ்வ எத்தனிக்கின்றன.

எவரெஸ்டில் நிலவும்
பனிக்காற்றின் தழுவலாக
என்னைப் பிணைக்கும்
அன்புப்பூ சொரிகின்ற ஆத்மாக்கள்
துணையோடு நான்
ஒவ்வொரு உலையையும் புறமொதுக்கி
இரவுக்குள் பிரவேசிக்கிறேன்.

விழியுறங்கும் வேளையிலும்
உணர்வுகள் விழித்திருக்க
கனவுகளில் உலவுகிறேன்.

நான் எப்போதும் விழித்திருப்பேன்.

Previous Post Next Post

نموذج الاتصال