இயற்கை மருத்துவம் 14 - ஆதனூர் சோழன்


வெண்படைக்கு சோற்றுக்கற்றாழை!

இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரும் அளவு உபயோகப் படுத்தப்படுகின்றது.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்: கற்றாழையின் சோற்றை எடுத்துப் பல முறை கழுவி, இதில் சிறிது படிகாரம் அல்லது சீனாகற்கண்டு சேர்த்து, சிறு துண்டில் முடிந்து தொங்கவிட அதில் நீர் வடியும். இதை கண்ணில் விட, கண் நோய், கண் சிவப்பு, தீரும்.

இதன் சாறு வெப்பத்தைத் தணிக்கும். இந்தச் சாற்றுடன், வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகுத் தூள் சேர்த்துண்ண நீர்சுருக்கு, உடலரிப்பு நீங்கும்.

கற்றாழையை உலர்த்தி முறைப்படி பொடியாகச் செய்து உண்ண, இளமையாக நூறாண்டு வாழலாம்.

மலச்சிக்கல் தீர: இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, காய வைத்து பொடி செய்து, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால் கோப்பை தண்ணீரில் கலந்து பருக வேண்டும். 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

வெட்டுக்காயங்கள் குணமாக: இலையைக் கீறி சதைப்பகுதியை வெளியே தெரியுமாறு செய்து, அதைக் காயத்தின்மீது வைத்துக் கட்டுப்போட வேண்டும். காயம் ஆறும்வரை தினம் இருமுறை செய்யவும்.

வெண்படை குணமாக: கற்றாழையின் சோற்றை எடுத்து புதிதாக தினமும் மேலே பூசிவர வெண்படை குணமாகும்.

மூலநோய் தீர: இலைத்தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு பிடி முருங்கைப் பூ சேர்த்து, அம்மியில் அரைத்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சை அளவு சாப்பிட்டு வர வேண்டும். தினம் காலை மட்டும் 1 வாரம் வரை இவ்வாறு செய்ய வேண்டும். உப்பு, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குறைய: சோற்றுக்கற்றாழை சாறு 6 தேக்கரண்டியுடன் ஒரு சிட்டிகை அளவு பொரித்த பெருங்காயமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும், தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 1/2 கிராம் அளவிற்கு தினமும் 2 வேளை, சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

இதன் சாறு எடுத்து, இதே அளவு நல்லெண்ணெய் எடுத்து கலந்து காய்ச்சி தலையில் தடவி வர தூக்கம் உண்டாகும். முடி வளரும்.

சிற்றாமணக்கு எண்ணெய் 340 கிராம், கற்றாழைச் சோறு 85 கிராம், ஊற வைத்து அரைத்த வெந்தயம் 81/2 கிராம், சிறுக அரிந்த வெள்ளை வெங்காயம்-1, சேர்த்து காய்ச்சிய பதத்தில் இறக்கி வடிகட்டி, அதை 1 வேளை மட்டும் 1 தேக்கரண்டி சாப்பிட்டுவர, உடல் சூடு நீங்கும். உடல் பெருகும். மேக அனல் மாறும்.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லது கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்ப தற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல ரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டுவர குடல்புண், மூலநோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.


Previous Post Next Post

نموذج الاتصال