Description
மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் காமராஜர். அவருக்கு நேர் எதிராக, வசதியான குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞர் பட்டம் பெற்றவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
காமராஜரோ தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி அய்யர் என்ற பார்ப்பனரால் அரசியலில் வளர்க்கப்பட்டவர். அதாவது, தனது அரசியல் எதிரியான ராஜகோபால் அய்யங்காருக்கு எதிராக சத்தியமூர்த்தி பயன்படுத்திய சூத்திர ஆயுதமாக காமராஜர் இருந்தார்.
ஒப்பீட்டளவில் வ.உ.சியும்கூட இப்படித்தான். அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ளும் அளவுக்கு ஆங்கில அறிவும் பொருள் வசதியும் பெற்றிருந்தார். இருந்தாலும், அவருடைய வயதுக்கு ஏற்ற முறுக்கோடு, அகில இந்திய காங்கிரஸில் இருந்த தீவிரவாத மற்றும் இந்துமத வெறிகொண்ட பாலகங்காதர திலகரோடு தொடர்பு கொண்டிருந்தார்.
காங்கிரஸில் கோகலே தலைமையிலான மிதவாதக் குழுவே பெரும்பான்மையாக இருந்தது. ஆனால், திலகர் வெள்ளையருக்கு எதிராக அறிவியலுக்குப் புறம்பான அவசர யுக்திகளோடு மோதினார்.
அவருடைய பேச்சைக் கேட்டு, தமிழ்நாட்டில் வெள்ளையருக்கு எதிராக சக்திக்கு மீறிய போராட்டங்களை முன்னெடுத்து கடுமையான சிறைத்தண்டனை பெற்றவர் வ.உ.சி. அவர், தண்டனை முடிந்து வெளியே வந்தபோது, தமிழ்நாடு காங்கிரஸார் அவரை மதிக்கவே இல்லை. அவருடைய பெருமையை மதித்து அவருக்கு ஆதரவாக இருந்தவர் தந்தை பெரியார் மட்டுமே.
தனது கடைசிக் காலத்தில் தந்தை பெரியாரைத் தனது தலைவராக கொண்டவர் வ.உ.சி.
தமிழ்நாட்டில் ராஜாஜிக்கு எதிராக காமராஜ் வளர்க்கப்பட்டாலும், அவரை முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும்படி ஊக்குவித்தவர் பெரியார். அவருக்கு அரசியல் ரீதியாக தொடர்ந்து ஆதரவளித்தார். அதுமட்டுமின்றி, காமராஜரைப் பயன்படுத்தி, சமூகநீதிக்கான கல்வி உள்ளிட்ட சில காரியங்களை நிறைவேற்றிக் கொண்டார்.
காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதனால், நேரு மரணத்துக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், சாஸ்திரி மரணத்துக்கு பிறகு நேருவின் மகள் இந்திரா காந்தியையும் பிரதமராக பரிந்துரைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.
ஆனால், இறுதிக் காலத்தில் இந்திராவின் முற்போக்குத் திட்டங்களுக்கு எதிராக இருந்ததால், காங்கிரஸை உடைத்தார் இந்திரா. அதையடுத்து காமராஜர் தமிழ்நாட்டு அரசியலுக்குள் முடங்கினார்.
ஒருவழியில் காமராஜரும் தனது இறுதிக் காலத்தில் சொந்தக் கட்சியினரே மதிக்காத நிலைக்கு ஆளானார்.
காமராஜர், வ.உ.சி. இருவருடைய வாழ்க்கை வரலாறும் ஒரே நூலில் இடம்பெற்று இருப்பதால் இந்த உண்மைகளை அறிய உதவும்.
தமிழ்நாட்டின் இரண்டு மகத்தான தேசபக்தர்களின் வரலாறை ஒரே நூலில் வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.