Description
இது ஒரு உணர்வுபூர்வமான விஷயம்!
“தாயா புள்ளயா பழகுறோம், நமக்குள்ளேயே எதுக்கு இந்த போட்டி பொறாம?”
நாம் எல்லோரும் திராவிடர்கள். நமக்குள் எதற்கு சச்சரவு? என்பதுதான் இந்த கேள்வியின் பொருள்.
ஆனால், நம் விரலே நம் கண்ணைக் குத்துகிறது.
ஒரு காலத்தில் தமிழன் உலகத்தையே கட்டி ஆண்டான். கங்கை கொண்டான். கடாரம் வென்றான் என்று பெருமை பேசுகிறோம்.
ஆனால், ஆரியர்களை நம்மால் வெல்ல முடியாதா?
ஆரியர்களை வென்றுதானே கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சிலை வடித்தான் சேரன்.
அதே சேர நாடு இப்போது நமது மண்ணை பாலைவனமாக்க முயற்சிப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் நாம்தான் தாய் என்பதால் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடியுமா?
திராவிடம் என்ற பெயரில் நாம் மட்டுமே இயங்க வேண்டுமா?
நம்மிலிருந்து பிரிந்த நமது உறவுகளுக்கும் அந்த உணர்வு வேண்டாமா?
மலையாளியை தலைவராக்கினோம். கன்னடரை தலைவராக்கினோம். தெலுங்கரையும் தலைவராக்கினோம். தமிழாய்ந்த தலைவரை மட்டும் தலைவராக்க தடங்கல் ஏன்?
ஆரியம் கூத்தாடுகிறது? சிந்து சமவெளியில் தொடங்கிய இந்தக் கூத்து இன்னும் எத்தனை காலத்துக்கு தொடரும்?
நமது ஏமாளித்தனத்தை மூலதனமாக்கி இன்னும் எத்தனை காலத்திற்கு நம்மை ஏமாற்றுவார்கள்?
தமிழா! நாம் நம்மை ஏமாற்றிக் கொள்ளலாம். நம்மை இன்னொருவர் ஏமாற்றுவதை எப்படி அனுமதிக்கலாம்?
கன்னடராக பிறந்தாலும் தந்தை பெரியார் நமது ஏமாளித்தனத்தை அம்பலப்படுத்தி நம்மை ஆரிய கூத்தாடிகளி டம் இருந்து பாதுகாக்கப் பாடுபட்டார்.
செருப்பால் அடித்தாலும் அவர் நமக்காக உழைத்தார். நமது வாழ்க்கையை சீர்திருத்தினார். எதையும் கேள்வி கேள் என்று கூறி எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இப்போது, நாம் கேட்கும் கேள்விகளைத் தவிர எது எதற்கோ பதிலளித்து நம்மை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது ஆரியம்.
ஆம். முல்லைப் பெரியாறு அணைக்காக நாம் போராடி னால் அதை வன்முறை என்று முத்திரை குத்துகிறார்கள். நமது போராட்டத்தை தவறு என்கிறார்கள். அணையை உடைப்போம் என்பதை வன்முறை என்று சொல்ல மறுக்கிறார்கள்.
நம்மைப் பிளவுபடுத்தி அந்த மோதலில் குளிர்காயும் அவர்களுக்கு நம்மில் சிலர்தான் எப்போதும் துணையாக இருக்கிறார்கள். அவர்கள் சிலர், நாம் பலர் என்ற உண்மையை உணரும் வரை அவர்கள் நமது ரத்தச் சூட்டில் குளிர்காயத் தான் செய்வார்கள்?
நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான நம்மை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்களை அடையாளம் காண வேண்டிய சமயம் இது.
தமிழா, தமிழுணர்வு கொள்!
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.