Description
“இந்தியா மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட நாடு என்று பெரும்பாலான இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மிகச் சிலர் மட்டுமே நாம் அறிவியலிலும் முன்னோடியானவர்கள் என்பதை உணர்ந்திருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக நாம் அன்னியருக்கு அடிமையாகவே வாழ்ந்துவிட்டோம். அதனால், அறிவியல் என்பது ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான விஷயமாக கருதிவிட்டோம். ஆனால், ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே அறிவியலுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது என்பதை மறந்துவிட்டோம்.”
இப்படித்தான் பழம்பெருமையை அளந்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
நிஜத்தில், இந்தியர்களில் பிராமணர்களைத் தவிர வேறுயாரும் படிக்கக் கூடாது என்று கற்பிக்கப்பட்டிருந்ததை மறந்துவிடுகிறோம். அறிவியலில் முன்னோடியாக சிந்திக்க முடிந்த பலர் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல போதுமான கல்வி அறிவு இல்லாமல் இருந்தார்கள்.
கல்வி அறிவு பெற்ற சில பிராமணர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை எழுதி வைத்தாலும் அதை எல்லோரும் படிக்க அனுமதிக்கவில்லை. அல்லது எல்லோருக்கும் கற்றுத்தர விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
கி.மு. 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் அறிவியல் வளர்ச்சியில் இந்தியாவின் பொற்காலமாக திகழ்ந்தது. மவுரிய, ஷாகா, குஷான, குப்த சாம்ராஜ்யங்களின் காலத்தில் அறிவியல் செழித்து வளர்ந்தது.
நாளந்தா, வாரணாசி, தக்ஸிலா என பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இருந்தன. அவற்றில் பக்கத்து நாட்டு, தூரத்து நாட்டு அறிஞர்கள் பலர் பணிபுரிந்தனர்.
இவற்றில் கணிதம், வானவியல், மருத்துவம் தொடர்பான மிகச்சிறந்த கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. பூஜ்யம் என்ற எண்ணை உலகுக்கு கொடுத்தது இந்தியாதான். கணிப்பு முறையை கண்டுபிடித்தது இந்தியர்கள் என்றாலும் அதை மேற்கொண்டு ஆராய யாருமில்லாமல் போயிற்று. அதனால் அந்த பெருமை ஐஸக் நியூட்டனுக்கு போயிற்று.
12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கூட தென்னிந்தியா, மகாராஸ்டிரா, குஜராத் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்தியாவின் புராதன கலாச்சாரம், கல்வி ஆகியவற்றில் பிடிப்பு இருந்தது. ஆனால், இந்திய அறிவியல் விஷயங்கள் பாரசீகம், அரபி ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு அரேபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக இப்போதும் கூறுகிறார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.
போர்களாலும், படையெடுப்புகளாலும் இந்தியா சீரழிந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் ஐரோப்பா அறிவியலில் மறுமலர்ச்சி அடையத் தொடங்கியது. கோபர்நிகஸ், கலிலியோ ஐஸக் நியூட்டன் ஆகியோரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்மையை அறியும் ஆர்வத்தை எங்கும் தோற்றுவித்தன.
1921 ஆம் ஆண்டு சிந்து சமவெளியில் மிகப்பெரிய மனித நாகரிகம் செழித்திருந்தது என்பதை கண்டுபிடித்து சொன்னார்கள். அப்போதுதான் இந்தியர்கள் தங்கள் பெருமைமிகுந்த கடந்த காலத்தை அறிந்தார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் எல்லோருக்கும் கல்வி கற்கும் உரிமை கிடைக்கத் தொடங்கியது. ஆங்கிலத்தில் கல்வி கற்கும்போது நவீன அறிவியல் அறிமுகமானது. அவர்கள்தான் 1857ல் கல்கத்தா, பம்பாய், சென்னை என்று மூன்று இடங்களில் பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்கள். 1876ல் ஒரு பணக்கார அறிவியலாளரான மகேந்திர லால் சிர்கார் கல்கத்தாவில் முதல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார். விடுதலைக்கு முந்தைய இந்தியாவின் அறிவியல் ஆர்வலர்களுக்கு இது மிகப்பெரிய வரமாக இருந்தது.
1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. இந்திய அறிவியல் வரலாற்றின் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டது. அறிவியலாளர்களுக்கு ஏராளமான வசதிகள் உருவாக்கப்பட்டன. அறிவியலின் பல்வேறு துறைகளில் வளம் செழித்தது. இந்தியா இப்போது அணு ஆயுத நாடுகளின் வரிசையில் இருக்கிறது. அண்டார்டிகா ஆராய்ச்சி குழு நாடுகளில் இடம்பெற்று உள்ளது. பயிற்சிபெற்ற தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறியிருக்கிறது.
இத்தனைக்கும் இந்தியா இப்போதும் வளர்முக நாடுதான். ஆனால், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இன்னும் விரைவாக முன்னேறும்.
அ.சோழராஜன்





Reviews
There are no reviews yet.