Description
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை சரியான திசையில் கொண்டு சென்றவர் கோபால கிருஷ்ண கோகலே.
பழமைவாதமும், கல்வியறிவற்ற, கல்வி அறிவு மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் இந்தியாவில் இருந்தனர். முடியரசுகளும், சமஸ்தானங்களும், ஜமீன்களும் நிறைந்த இந்தியாவாக இருந்தது. அப்படிப்பட்ட இந்திய மக்களுக்கு பிரிட்டிஷார் கல்வி அறிவைக் கொடுத்தார்கள். நவீன ஆட்சி முறையை அறிமுகப் படுத்தினார்கள். கட்சி அரசியலை கற்றுக் கொடுத்தார்கள்.
ஆனால், பிரிட்டிஷாரின் பள்ளிகள் கல்லூரிகளில் படித்துவிட்டு, அவர்களை மதவாதிகளாக சித்தரித்து, இந்துமத வெறியை கையில் எடுத்து ஒரு குழுவினர் போராடத் தொடங்கினர்.
அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்தியர்களின் அறியாமையை பயன்படுத்தி, வன்முறையை தூண்டினார்கள். அறிவியலுக்கு ஒவ்வாத போராட்ட முறைகளை கையில் எடுத்தார்கள்.
அவர்களின் தீவிரவாத போராட்டத்தால் இந்தியர்களின் எதிர்காலம் மேலும் அறியாமையில் சிக்கிவிடும் என்று கோபால கிருஷ்ண கோகலே சரியாக கணித்தார். பிரிட்டிஷார் உதவியுடன் இந்தியாவில் நவீன ஆட்சிமுறை ஏற்பட வேண்டும் என்று நினைத்தார். மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டிருக்கிற தொழில் வளர்ச்சியும் போக்குவரத்து வசதியும் உருவாக வேண்டும் என்று விரும்பினார்.
தீவிரவாதக் குழுவைத் தனிமைப் படுத்துவதில் வெற்றிபெற்றார். அவருக்கு அடுத்தபடியாக போராட்டத்தை தலைமையேற்று நடத்துவதற்கு தகுந்த ஆளாக காந்தியை கண்டுபிடித்தார். அவரை காங்கிரசுக்குள் கொண்டுவந்தார்.
கோபால கிருஷ்ண கோகலேவும், காந்தியும் பிரிட்டிஷாரை அனுசரித்து, இந்தியாவின் தேவைகளை ஓரளவு நிறைவேற்றி, அவர்கள் மூலமாக மூடத்தனமான இந்தியர்களின் பழக்க வழக்கங்களை ஒழிக்கும் சட்டங்களை இயற்றக் காரணமாக இருந்தனர்.
பிரிட்டிஷார் இந்தியாவைச் சுரண்டி, பிரிட்டனுக்கு கொண்டு போனார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டினார்கள். ஆனால், ரயில் போக்குவரத்து, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகள் என்று இந்தியாவின் முகத்தையே மாற்றினார்கள்.
இதெல்லாம், மன்னர்கள் ஆட்சியில் சாத்தியமாக வாய்ப்பே இல்லை. மக்களுக்கு கல்வியை அறிமுகப்படுத்தி இருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.
அவர்கள் ஏற்படுத்திய வசதிகளைக் கொண்டே இந்திய மக்களை காந்தி வலுவாக ஒருங்கிணைக்க முடிந்தது. ரயில் பயணங்களில்தான் அவர் இந்தியர்களை சந்தித்து போராட்ட உணர்வை ஊட்டினார். அகிம்சை வழிப் போராட்டத்தின் சக்தியை உலகிற்கு புரிய வைத்தார்.
அடிப்பதைக் காட்டிலும் அடியைத் தாங்கி எதிரியை வலுவிழக்கச் செய்யும் வித்தையை காந்தி நிகழ்த்திக் காட்டினார். கோகலேவின் சீடராக, விடுதலைக்கு அவசரப்பட்ட குழுக்களின் தீவிரத்தன்மையை நீர்த்துப் போகச் செய்தார்.
தீவிரவாதிகளின் கை ஓங்கியிருந்தால் என்னாகியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கும். இந்தியாவுக்கு விடுதலை கொடுத்துச் சென்ற சமயத்திலேயே, 500க்கு மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பல மிகவும் பின்தங்கி, ஏராளமான மூடப்பழக்க வழக்கங்களைக் கொண்டவையாக இருந்தன. பிரிட்டிஷார் சற்று முன்கூட்டியே விரட்டப் பட்டிருந்தால், இந்தியா மீண்டும் மதவாதமும் மூடநம்பிக்கையும் நிறைந்த நாடாகவே இருந்திருக்கும்.
அந்த வகையில் இந்தியாவை மதசார்பற்ற நாடாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி நடைபெறும் நாடாக, சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நாடாக மாற்றுவதில் இந்த இரு தலைவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.