Description
நேதாஜி என்ற பெயரைக் கேட்டாலே மயிர்க்கால்கள் கூச்சறியும்.
அடிமையாய் கிடந்த இந்தியாவின் புதல்வர்களை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த தன்மானத் தலைவன் நேதாஜி.
விடுதலை என்பது அடிமைப்படுத்தியவனிடம் கேட்டுப் பெறுவதல்ல. அவனிடம் இருந்து எடுத்துக் கொள்வது என்று முழங்கியவர்.
அவரது வீர முழக்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடறியைப் பிடித்து ஆட்டியது. சுபாஷ் சந்திர போஸ் என்ற பெயர் பிரிட்டிஷாரின் செவிகளுக்குள் நெருப்புக் குழம்பாய் இறங்கியது.
அவருடைய பேச்சு அனலைக் கக்கியது. புரட்சி நெருப்பை பற்றவைத்தது.
அகிம்சை தத்துவம் இந்தியாவுக்கு உதவாது. பிச்சை கேட்டுப் பெறும் சுதந்திரத்தை மக்களால் பாதுகாக்க முடியாது.
ரத்தம் சிந்திப் பெறும் சுதந்திரம்தான் பாதுகாக்கப்படும். இந்தியத் தாயின் விடுதலைக்காக ரத்தம் சிந்துவதற்கு 35 கோடி மக்கள் தயாராக இருக்கிறார்கள். ராணுவம் அமைத்து வெள்ளையரை விரட்ட வேண்டும் என்றவர் போஸ்.
அவருக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து காந்தியே அவரை காங்கிரஸின் தலைவராக பரிந்துரை செய்தார். 41 வயதில் மாபெரும் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான போஸுக்கு தேசத்தலைவர் என்ற பட்டத்தை கொடுத்தார் மகாகவி ரவீந்திர நாத் தாகூர்.
காங்கிரஸ் தலைவராக போஸ் இருந்தால் விடுதலை குறித்து பேசுவது வீண் என்று பிரிட்டிஷ் அரசு காந்தியிடம் கூறியது.
பிரிட்டிஷ் அரசின் பேச்சைக் கேட்டு போஸை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடாது என்று எதிர்த்தவர் காந்தி.
காந்தியின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, காந்தி நிறுத்திய வேட்பாளரை தோற்கடித்தவர் நேதாஜி.
நேதாஜியை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்காக உண்ணாவிரதம் இருந்தார் காந்தி. அவருக்காக நேதாஜியை காங்கிரஸிலிருந்து நீக்கினார்கள்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டன் கடும் நெருக்கடியில் சிக்கியிருந்தது. சிக்கலில் சிக்கியிருக்கும் எதிரியை மேலும் நெருக்குவதை விட்டு அவனை மீட்கும் வேலையில் ஈடுபட்டார் காந்தி.
வெளிநாட்டவன் ஒருவனை விரட்டுவதற்கு வெளிநாட்டு உதவியோடு ராணுவம் அமைத்து போராட வேண்டும் என்றார் நேதாஜி.
கோபப்பட கற்றுக் கொள்ளுங்கள் என்று இந்தியரை வற்புறுத்தினார் அவர்.
தனது தாய்நாட்டின் விடுதலைக்காக ராணுவம் அமைத்து போராடுவேன் என்று சொன்னதை தேசத்துரோக குற்றம் என்றது பிரிட்டிஷ் அரசு.
அவரை தூக்கிலிட்டுக் கொல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், அவர் இந்தியாவிலிருந்து தந்திரமாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றார். ஜெர்மனி ஆதரவோடு சுதந்திர இந்திய அரசை நிறுவினார். அந்த அரசுக்கென தனியாக வானொலியை அமைத்தார்.
வெளிநாட்டில் இருந்தாலும் அவருடைய வானொலி பிரச்சாரம் இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
ஜெர்மனி உதவியோடு அவர் அமைத்த இந்திய தேசிய ராணுவம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. பிரிட்டிஷார் அஞ்சி நடுங்கினர். போஸின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுக்கவே வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவிக்க வேண்டிய நிலை காந்திக்கு ஏற்பட்டது.
அந்த மாபெரும் தலைவனின் மகத்தான வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் இந்த நூல் உள்ளடக்கி யிருக்கிறது. அவரைப்பற்றி தமிழில் வெளிவராத தகவல்கள் ஏராளமாக இதில் இடம்பெற்று இருக்கின்றன.
எனது நூல்களுக்கு ஆதரவளிக்கும் வாசகர்களுக்கும், எனது நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் நக்கீரன் ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.