Description
இன்று ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசம் தூக்கியெறியப்பட்டுவிட்டது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மிகப் பெரும் வரலாற்று நிகழ்ச்சி. மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்த நிகழ்ச்சி. கம்யூனிஸ்டுகள் சோஷலிசத்திற்குச் செய்த துரோகத்தை வரலாறு புலப்படுத்திவிட்டது. அந்தத் துரோகம்: சோஷலிசத்திற்குள் பாசிசத்தை உருவாக்கியதே. சோஷலிச ஜனநாயகத்திற்குப் பதில், சோஷலிசத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை அனுசரித்ததின் விளைவு இந்தக் கொடூர பாசிசப் போக்கு. சோஷலிச உலகத்தின் இந்தச் சிதைவு கம்யூனிஸ்டுகளின் மயக்கத்தை, மமதையைப் போக்கியிருக்கும்? கடந்த காலத்தில் பல மார்க்சிய சிந்தனையாளர்கள், சோஷலிச நிர்மாணப் பணியில் ஏற்படும் பல தவறுகளைச் சுட்டிக் காட்டினர். அப்போது அவர்களை சோஷலிசத்தின் பகைவர்களாகக் கருதிய கம்யூனிஸ்டுகள் இன்று அவர்களின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் இருக்கின்றார்கள்.
ரஷ்யாவில் 1905இல் நடந்தப் புரட்சியிலிருந்து 1917 அக்டோபர் புரட்சிவரை நிகழ்ந்த எல்லா நிகழ்ச்சிகளையும், அதற்குப் பின்பு ரஷ்யாவில் ஏற்பட்ட போல்ஷ்விக்குகளின் ஆட்சியையும் அக்கறையுடன் கவனித்து, அந்த சோஷலிச சமுதாயம் நிலைக்க வேண்டும் என்பதற்காகத் தன் ஆதரவையும், விமர்சனத்தையும் வழங்கியவர் ரோசா லுக்சம்பர்க். பின்பு, அதே ரஷ்யர்களால் புறக்கணிக்கப்பட்டார்; மறைக்கப்பட்டார். அவர் போல்ஷ் விசத்திற்கு எதிராகச் செயல்பட்டார்; தேசிய இனப் பிரச்சினையில் லெனினுடைய கருத்தை (தேசிய விடுதலையை) ஏற்காதவர்; விவசாயி களின் பிரச்சினையில் அக்கறை இல்லாதவர் என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகளை ரோசா அடுக்கினார். தவறுகளைக் குறிப்பிடும்போது போலந்து சோஷலிச சிந்தனையாளர் ஐசக்தாட்சர் இவ்வாறு கூறியுள்ளார்:
“சந்தேகமில்லாமல், அவர் சில தவறுகள் செய்திருந்தார். ஆனால் அவை லெனின், ஸ்டாலின் செய்தத் தவறுகளைப்போல் மோசமானதல்ல.’
இப்போது ஐரோப்பாவில் உள்ள சோசலிஷ நாடுகளில் முதலாளித்துவம் முன்னுக்கு வந்து, சோஷலிசம் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும்; மூன்றாம் உலக நாடுகளில் சோஷலிசத்தின் அக்கறைக் குறைந்துவிடவில்லை. சிதைந்த சோஷலிச நாடுகளின் அனுபவத்திலிருந்து மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பாட்டாளிகளும் புரட்சிகர இயக்கங்களும் முற்றிலும் புதிய வகை சோஷலிசத்தை, உண்மையான சோஷலிச ஜன நாயகத்தை நிர்மாணிக்க முடியும். அதற்கு ரோசா லுக்சம்பர்க் போன்ற மறைக்கப்பட்ட மார்க்சியமேதைகளின் சிந்தனைகள் பரவ வேண்டும். இச்சிந்தனைகளிலிருந்து புதிய சிந்தனையும் செயலும் உருவாகும், என்பது நிச்சயம். இதுவரை ரோசா லுக்சம்பர்க், அந்தோனியோ கிராம்ஷி போன்ற மார்க்சிய சிந்தனையாளர்கள் மறைக்கப்பட்டதற்கு ஒரே காரணம்: அவர்கள் லெனினுடைய பல கருத்துகளை விமர்சித்தவர்கள், மறுத்தவர்கள் என்பதனால் மட்டுமே. ஆனால் சோஷலிசச் சிந்தனைக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் தனது சிறந்த பங்களிப்பைச் செய்தவர் ரோசா. அதற்காகவே அவர் வீரமரணம் அடைந்தார். அவர் இறுதி வரையிலும், உண்மையான தேசிய வெறியர்களின் மத்தியில் உண்மையான சர்வதேசியவாதியாகத் திகழ்ந்தவர். ஆனால் லெனினுக்குப் பிறகு ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் அவரை ஒரு சிறந்த சோஷலிசத் தலைவராக அறிமுகப் படுத்தவில்லை:
“ரோசாவின் சமரசமற்றப் புரட்சிகரவாதமும் 1914இல் பெரும்பான்மையான சோஷலிசத் தலைவர்களின் துரோகத்தனத்திற்கு எதிரான கோபாவேசமான விமர்சனமும் அவரைச் சீர்திருத்தவாத சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து முழுவதுமாகப் பிரித்து விட்டது. அதேநேரத்தில் அவர் லெனினுடைய திட்டங்களையும், அரசியல் தந்திரங்களையும் கூர்மையாகத் தாக்கியதால்; புரட்சிக்காரர் எனவும், திரிபு வாதத்திற்கு எதிரான விமர்சகர் எனவும் வாயால் புகழப்பட்டாலும், நடைமுறையில் அலட்சியப் படுத்தப்பட்டார். வீரமரணம் அடைந்தபோதிலும் புகழ்பெற்றக் கம்யூனிசத் தலைவர்களின் வரிசையில் அவர் பெயர் இடம் பெறவில்லை.”
என்று மார்க்சிய அறிஞர் பேராசிரியர் லெஸ்ஸக் கொலகோவ்ஸ்கி கூறியுள்ளார்.





Reviews
There are no reviews yet.