Description
மனிதாபிமானிகள் அனைவருமே இடதுசாரிகளாக இருப்பார்கள். அல்லது இடதுசாரிகள் அனைவருமே மனிதாபிமானிகளாக இருப்பார்கள்.
உலகில் பாதிக்கப்படுகிற மக்களுக்கு ஆதரவாக, ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக, அராஜகத்துக்கு எதிராக, அநீதிக்கு எதிராக போராடும் அனைவரும் தோழர்களே.
அந்த வகையில்தான் லண்டன் வாழ் தமிழரான ஃபாசில் ஃப்ரீமேன் அலி எனது கவனத்தை ஈர்த்தார். முதலில் அவருடைய பெயர் எனக்கு வித்தியாசமாக இருந்தது. இஸ்லாமியரான அவருடைய பெயரில் ஃப்ரீமேன் அதாவது சுதந்திரமான மனிதன் என்று அர்த்தப்படும் வார்த்தையை இணைந்திருந்தது.
அதுபற்றி கேட்டபோது, தானே விரும்பி அந்த வார்த்தை கெஜெட்டில் மாற்றிக் கொண்டதாக கூறினார். ஃப்ரீமேனாக உருவாக வேண்டும் என்ற தனது நோக்கத்தை தனது பெயரிலேயே அடையாளப்படுத்திய அவருடைய சிந்தனை போற்றத்தக்கதுதானே.
உலகில் அவரவருக்கு பிடித்த ஏதேனும் ஒரு மதம் அல்லது மார்க்கம் இருக்கலாம். ஆனால் யாருக்கும் மதத்தின் பேரால், மதம் பிடித்துவிடக் கூடாது என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.
எல்லா மதங்களும் சகிப்புத்தன்மையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவதாக கூறுவார்கள். ஆனால், நடைமுறையில் அடுத்த மனிதனின் கருத்தை அல்லது விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.
தோழர் ஃபாசில் இஸ்லாமிய மக்களுக்கு விடுத்திருக்கிற அன்பான வேண்டுகோள் என்ற கட்டுரை கருத்தாழம் மிக்கது. அதுபோலவேதான் துளிவிஷம் என்ற கட்டுரையும் இஸ்லாமிய மக்களால் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டியது.
அவருடைய எல்லாக் கட்டுரைகளும் மனிதநேயத்தை மட்டுமே கருவாகக் கொண்டுள்ளது. ஆனால், வெவ்வேறு சுவைகளைக் கலந்து எழுதப்பப்டது. நகைச்சுவைக் கதைகளில்கூட தன்னம்பிக்கை விதையை விதைத்துச் செல்வது அருமையான ஸ்டைல். இவருடைய எழுத்து நடை விறுவிறுப்பானது. தெளிந்த நீரோடை போல விஷயத்தை சொல்லிச் செல்கிறது.
சொல்ல வரும் விஷயத்தை யார் மனமும் நோகாமல், தனது மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்வதில் தோழர் ஃபாசில் வெற்றி பெற்றிருக்கிறார். இவருடைய எழுத்துக்களை எல்லோரையும் போல நானும் வாசித்து சென்றிருக்கலாம்.
ஆனால், அவருடைய எழுத்துகள் நூல்வடிவம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். அதை நூல்வடிவமாக்க என்னிடம் வசதி இருந்தது. எனது நூல்களை மட்டுமே வெளியிட சிபி பதிப்பகத்தை பயன்படுத்தி வந்தேன்.
முதன்முதலில் தோழர் ஃபாசில் அவர்களின் எழுத்துக்களுடன் புதிய எழுத்தாளர்களின் எழுத்துகளை வெளியிடலாம் என்று நினைத்தேன். உடனே, அவரிடம், எனது விருப்பத்தை தெரிவித்தேன்.
பிறகு இருவரும் பேசினோம். பின்னர், ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் எழுதியவற்றை தொகுத்து, தலைப்புவாரியாக பிரித்து படித்துப் பார்த்தபோது நிஜமாகவே ஒரு நல்ல புத்தகமாக உருவெடுத்திருந்தது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் படிக்கும் வகையில் இந்த நூல் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. சிபி பதிப்பகத்தின் முதல் நூலே ஒரு முழுமையான நூலாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
படிக்கத் தொடங்கினால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பீர்கள்… அவரும் அடுத்த நூலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.. தொடரட்டும் அவருடைய எழுத்துப் பணி. தமிழ் அவரால் சிறக்கட்டும்.
கடைசியாக ஒரு விஷயம், தங்கள் எழுத்துக்களை புத்தக வடிவமாக்கும் எண்ணமுள்ள புதிய எழுத்தாளர்களுக்கு சிபி பதிப்பகம் நிச்சயமாக துணை நிற்கும். புதிய நூல்கள் பலவற்றை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும்.
ஆதனூர் சோழன்
பதிப்பாளர்





Reviews
There are no reviews yet.