Description
பயணம் எப்படித் தோற்கும்?
“உள்ளங்கையில் உலகம்“ என்ற எனது முதல் அறிவியல் நூலுக்கு கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, அறிவியல் விஷயங்களை தொடர்ந்து எழுத விரும்பினேன். தீக்கதிர் நாளிதழில் பணிபுரிந்த வரை, எனது விருப்பப்படி அறிவியல் நிகழ்வுகளை எழுத முடிந்தது.
ஆனால், அதன்பிறகு நான் பணியில் சேர்ந்த இதழ்களில் அறிவியல் எழுத ஆதரவு இல்லை. வாரம் ஒருமுறையாவது தொடர்ந்து எழுதலாம் என்று கேட்டும் அனுமதி இல்லை.
இதற்கு காரணம் அறிவியல் பகுதியை தொடங்கினால், அதைத் தொடர்ந்து எழுத வேண்டும். அறிவியலை சுவையாக எழுதினால்தான் நன்றாக இருக்கும். அதற்கான ஆட்கள் கிடைப்பது கஷ்டம். ஒரு பத்திரிகையில் ஒருவரை மட்டுமே சார்ந்து ஒரு பகுதியை தொடங்க முடியாது என்று சொன்னார்கள்.
சரி நமக்குக் கிடைத்த வாய்ப்பு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால், ஓய்வு நேரங்களில் இணையதளத்தில் அறிவியல் விஷயங்களை தேடி எடுத்து எனது திருப்திக்காக எழுதிச் சேமித்தேன்.
பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக தொடங்கப்பட்ட ஜனசக்தி நாளிதழில் சேர்ந்தேன்.
அப்பாட.. தீக்கதிரைப் போலவே இங்கேயும் எனது விருப்பப்படி அறிவியல் விஷயங்களை எழுத அனுமதி கிடைத்தது.
ஒருகட்டத்தில் நியூ செஞ்சுரி பதிப்பகத்தின் துணை நிறுவனமான பாவை பப்ளிகேஷன்ஸுக்காக அறிவியல் நூல்களை எழுதலாம் என்று கேட்டார்கள்.
ஜனசக்தியில் தொடர்ந்து எழுதியவற்றை புத்தகமாக வடிவமைத்துக் கொடுத்தேன். பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்து அறிவியல் நூல்களையும் குழந்தைகளுக்கான வரலாறு உள்ளிட்ட பல துறை செய்திகளை சுவையாகத் தொகுத்தும் கொடுக்கத் தொடங்கினேன்.
இந்நிலையில்தான் நான் விரும்பியபடி எழுத நக்கீரன் வாய்ப்புக் கொடுத்தது. அறிவியல் மட்டும் இல்லாமல், எல்லாத் தலைப்புகளிலும் நூல்களை எழுத முடிந்தது.
நானே, டைப் செய்து லேஅவுட்டும் முடித்துக் கொடுப்பதால் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் கொடுக்கும்படி அண்ணன் நக்கீரன் கோபால் அனுமதி கொடுத்தார்.
அறிவியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, கவிதைகள், அரசியல் கட்டுரைகள், சிறுவர் நூல்கள், மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, நாடுகளின் வரலாறு என்று நூல்களை எழுதிக் கொடுத்தேன்.
இந்த நூலில் எல்லாத் துறை அறிவியல் முன்னேற்றங்களையும் குறித்த தகவல்களையும் சுவையாகக் கொடுத்திருக்கிறேன்.
பல்துறை அறிவியல் தகவல்களை தமிழில் எளிமையாக தரவேண்டும் என்ற எனது முயற்சியில் ஓரளவேனும் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.
“எந்த ஒரு பயணத்திற்கும் முதல் அடிதானே துவக்கம்“
துணிந்து முதல் அடியெடுத்து வைத்தது வீணாகவில்லை.
“ஆதனூர் சோழனுக்கு ஒரு வேண்டுகோள். இம்மாதிரியான புத்தகங்களை அதிகம் எழுதவும். கவிதை எழுத மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்”
என்று திரு. சுஜாதா சொன்ன வார்த்தைகளை பின்பற்றி தொட்ரந்து எழுத முடிவு செய்தேன்.
அன்புடன்
ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.