வாழ்வியல் சிந்தனைகள் – 24
பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல்.
அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது.
ஒரு வாகனத்தின் உதிரிப்பாகம் அந்த வாகனத்தின் மீது பக்தி கொள்ளுமா? பல உதிரிப்பாகங்களும் சேர்ந்தது அல்லவா ஒரு வாகனம்? தான் வேறு, வாகனம் வேறு என்று உதிரிப்பாகங்கள் எண்ணுவதில்லையே? அப்படி எண்ணி உதிரிப்பாகங்கள் ஒவ்வொன்றாக பிரிந்து போய்விட்டால் அது ஒரு வாகனம் அல்லவே? முழு பிரபஞ்சமும் ஒரு வாகனம் போல இயங்கும் இயங்கு சக்தி அல்லவா? அதில் உள்ள சகல உதிரிப்பாகங்களும் பிரபஞ்சத்தின் பங்காளிகள் அல்லவா? பங்காளிகள் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருப்பது இயல்புதானே? இதில் ஏன் பயம்/பக்தி வரவேண்டும்? இந்த பயத்தால் யாருக்கு லாபம்?
எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான்..
வாழ்வியல் சிந்தனைகள் – 25
ஆத்மானந்தம் ஆத்மானுபூதி அல்லது ஸ்திதப்ரக்ஞை என்றும் ஆங்கிலத்தில் self realization or Enlightenment என்றும் பொதுவாக குறிப்பிடப்படுவது மனத்தின் இருப்பு இல்லாத ஒரு நிலையில் ஆத்ம அனுபவித்திலியித்திருக்கும் நிலையாகும்.
இந்த உன்னத நிலையினை அடைவதற்காக பக்திமார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம், தியான மார்க்கம் என்று பலவிதமான வார்த்தைகளில் குறிப்பிடப்படும் வழிகளை சிரத்தையாக கடைப்பிடித்து மனித பிறவியின் உன்னத நிலையை அடையவேண்டும் என்றுதான் எல்லோரும் போதிக்கிறார்கள்.
இது சுத்தமான வடிகட்டின பித்தலாட்டமாகும்.
இந்த சமய குருமாரும், சாமிகளும், ஆசாமிகளும், குறிப்பிடும் இந்த ஞானம் அல்லது வெங்காயம் எனப்படுவது அப்படி ஒன்றும் தேட கிடைக்காத பெரும் நிதியம் அல்ல.
எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான், நீங்கள் வேண்டாம் என்றாலும் அந்த காரட் உங்களுக்கு கிடைக்க போகிறது என்பதே உண்மை, இதை மிகவும் Authentic க்காகவே சொல்கிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம், எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.
அழகான வசந்த மாளிகை போன்ற வீட்டை கட்டி கண்ணை கவரும் வர்ண கலவைகளால் பூசி பூசி அழகு பார்த்த வீட்டை இது வெறும் மாயை என்று இடித்து தள்ளி விட்டு ஒன்றுமே இல்லாத வெட்ட வெளியில் நின்றுகொண்டு ஆகா இது ஆனந்த பெருவெளி இதுவல்லவோ ஆன்றோர்கள் தேடி கண்டு பிடித்து நமக்கு உணர்த்திய ஞான மாளிகை என்பதை என்ன சொல்வது?
இயற்கையை மிஞ்சின கடவுள் இல்லை.
இன்று நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சம் இன்றைய கடவுள் அல்லது இன்றைய ஞானம் அல்லது இன்றைய சுவர்க்கம் எல்லாமே இதுதான்.
இது நிச்சயமாக நிரந்தரம் அல்ல. இது இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ எம்மை விட்டு நீங்கிவிடும்? அல்ல அல்ல நாம் இதை விட்டு நீங்கி விடுவோம்.
அடுத்தது நாம் காணப்போகும் உலகம் அந்த அழகான வெட்ட வெளிதான். அங்கும் வேறு விதமான அற்புதங்கள், அதிசயங்கள் அல்லது அலுப்பூட்டும் சமாச்சாரங்கள் இருக்கத்தான் போகின்றன.
அது வரும் நேரம் வரட்டும் இங்கிருந்து இதை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கையில் இது வெறும் மாயை என்று இதை ஊதாசினபடுத்தும் முட்டாள்தனத்தை குருஜிமார் சமய பெரியார் என்று சொல்ல படுபவர்கள் எல்லாம் பிரசாரம் செய்து மனித சமுதாயத்தை தவறான வழியில் பெரிதும் செலுத்தி விட்டார்கள்.
மோட்டார் காருக்கு எஞ்சின் எப்படியோ அப்படித்தான் மனித பிறவிக்கு மனம் அமைந்திருக்கிறது. எஞ்சின் வெறும் மாயை அதை கழற்றி எறியுங்கள் என்று சொல்லும் முட்டாள்களை வழிகாட்டிகள் என்று கூறும் பித்தலாட்டம்தான் சமயங்கள்.
மனிதபிறவியின் அற்புத சக்தியே மனதில் தான் பெரிதும் தங்கி இருக்கிறது.
அப்படி பட்ட அற்புதசக்தி வாய்ந்த மனதை செயலிழக்க வைக்க ஏராளமான டெக்னிக்குகள் வேறு. மெடிடேஷன், குரு மந்திரம் போன்ற நித்திரை குளிசைகளை இந்த சமய வெங்காய கூட்டம் கண்டு பிடித்திருக்கிறது.
எஞ்சின் ஓவராக வேலைசெது சூடேறினால் தற்காலிகமாக என்ஜினை நிறுத்துவது நல்லதுதான். அதே போல மனம் தன்னம்பிக்கை இழந்தால் ஒரு தெரபி போல இந்த தற்காலிக நித்திரை குளிசைகள் பயன் படும்.
மனம் தனது துன்பம் அல்லது இயலாமையை விட்டு சுதாகரித்துவிட்டால் பின்பு அந்த மனம் இந்த அற்புத வாழ்வை அனுபவிக்க தொடங்கிவிடும்.
ஆனால் இந்த ஆத்மீக வெங்காய வியாபாரிகளோ அப்படியே வாடிக்கையாளரை ஒரே கமுக்கமாக பிடித்து இதுதான் மார்க்கம் இப்படியே மனதை அடக்கு அல்லது மனதைக் காலியாக்கு அதுதான் உய்வதற்கு மார்க்கம் என்று சொற்பொழிவு ஆற்றி மனிதவாழ்வை வீணடிக்கும் காரியத்தை செய்து விடுகிறார்கள்.
இவர்கள் கூறும் ஆத்மீக அல்லது கடவுள் கோட்பாடுகள் எல்லாமே ஏறக்குறைய மனிதர்களால் ரசிக்கப்படும் சமாசாரங்களை எல்லாம் கடவுளுக்கு எதிரானவையாக காட்டுவதிலேயே வந்து நிற்கும்.
இதனால்தானோ என்னவோ திரு யு ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த ஸோ கோல்ட் என்லயிட்மெண்டை ஒரு CALAMITY என்று குறிப்பிட்டார். உண்மையில் அது ஒரு விபத்து அனுபவம்தான்.
இந்த பிரபஞ்சத்தை விட்டு நாம் சென்ற பின்பு அது ஒரு வேளை அற்புதமாக இருக்க கூடும். ஆனால் அதற்காக இந்த அற்புதங்களை இழப்பது நிச்சயமாக ஒரு மோசமான விபத்துதான்? கலமிட்டிதான்.



