Description
யார் இந்த பாப்லோ நெருடா…?
பாப்லோ நெருடா தென்னமெரிக்காவில் உள்ள சிலி என்ற நாட்டைச் சேர்ந்த மாபெரும் கவிஞன். கம்யூனிஸ சித்தாந்ததை ஏற்றுக்கொண்ட மாபெரும் புரட்சிக் கவிஞன். நோபல் பரிசு வென்ற இவர், சிலி நாட்டின் அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தவர். இவர் எழுதிய காதல் கவிதைகள் உலகம் முழுவதும் காதலர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருந்தன. பாப்லோ நெருடா, ஏராளமான அரசுப் பொறுப்புகளை ஏற்று பணியாற்றி இருக்கிறார்.
சிலி நாட்டின் ஜனாதிபதி ஆக வாய்ப்பு தேடிவந்தபோது அதை விட்டுக்கொடுத்தவர். கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு கைக்கூலியான ராணுவ தளபதி பினோசெட் கலகம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, மருத்துவமனையிலேயே விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். அதன் மூலம் சக்திவாய்ந்த அவருடைய குரலை அமைதியாக்க முடிந்தது. ஆனால், அவருடைய கவிதை வரிகள் சிலியில் இன்னும் புரட்சிகர மாற்றங்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
அவருடைய பல முகங்களில் ஒன்றுதான் பத்திரிகையாளர் முகம். இவர் பத்திரிகையாளராக பணியாற்றிய சமயத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நிகழ்வுகளை எப்படி பதிவு செய்திருக்கிறார் என்று வாசிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது. அவருடைய ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் விருப்பம். பல ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய விருப்பம் நிறைவேறுகிறது.
தொடரைத் தொடங்குவதற்கு முன், பாப்லோ நெருடா யார் என்பதை அறிந்துகொள்வதற்காக அவருடைய வாழ்க்கைக் கதையையும் சுருக்கமாக அறிந்துகொண்டால் நல்லது அல்லவா? அதற்காகவே அந்த மாபெரும் மனிதனைப் பற்றி அறிமுகம் செய்கிறோம்!
-ஆதனூர் சோழன்





Reviews
There are no reviews yet.