Description
1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் சி.என்.அண்ணாதுரை. இன்றைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மனதில் பேரறிஞர் அண்ணாவாக பதிவு பெற்றிருக்கிறார்.
இந்தச் சாதனை சாதாரணமாக நிகழ்ந்ததில்லை. அண்ணா தனது அறிவால் சாதித்தது. அண்ணாவைக் காட்டிலும் அறிவாளிகள் உலகத்தில் இல்லையா? அறிவால் சாதித்தவர்கள் இல்லையா? நிறையப் பேர் இருக்கலாம்.
தான் பெற்ற அறிவைக் கொண்டு சீரழிந்து கொண்டிருந்த தனது தாய்மொழியை செம்மைப் படுத்தியவர் யார்? தங்கள் மொழியில் சிறந்த படைப்புகளைப் பலரும் கொடுத்திருக்கலாம். தனது மக்களுக்கு தங்கள் மொழியின் சிறப்புகளைக் கற்பித்தவர் எத்தனை பேர்?
அண்ணா மட்டுமே அன்னைத் தமிழ் ஆரிய மொழியிடம் பறிகொடுத்த அணிகலன்களைத் திரும்பவும் உருவாக்கி அணிவித்தார். தமிழர்களே மறந்து போயிருந்த தமிழின் அழகை மீண்டும் புதுப் பொலிவுடன் அவர்களுக்கு புரியவைத்தார்.
அண்ணா உருவாக்கிய புதிய உரைநடை தமிழர்களின் பெருமைகளை அவர்களுக்கே எடுத்துச் சொன்னது. அதுவும் சொக்க வைக்கும் தமிழில் தமிழன் மறந்து போன, தமிழனை மறக்கடிக்கச் செய்திருந்த அவனுடைய வரலாறுகளை கற்பித்தது.
தமிழர்களைக் கவ்வியிருந்த இருளைப் போக்கும் வெளிச்சமாக அண்ணாவின் தமிழ் பேச்சும், எழுத்தும் புத்தொளி பாய்ச்சியது.
இன்றைக்குப்போல தகவல் தொடர்புகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாத அவருடைய காலத்தில் நடமாடும் ஒளிவிளக்காக இருள்படர்ந்த தமிழ்நாடு முழுவதும் அறிவொளி பாய்ச்சினார். இருளில் சிக்கியிருந்த இளைஞர்களுக்கும், ஆதிக்கத்திற்கு அடிபணிந்து கூனிக் குறுகிக்கிடந்த தமிழர்களுக்கும் மான உணர்ச்சியை ஊட்டினார்.
தமிழர்களின் மான உணர்ச்சியை தட்டி எழுப்புவதற்காக அண்ணா எழுதிக் குவித்தவை ஏராளம். கதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், திரைக் காவியங்கள், தம்பிக்கு கடிதங்கள் என அவர் எதை எழுதினாலும் அது தமிழுக்கு புதிதாகவே இருந்தது.
அண்ணாவின் எழுத்துகளே இளைஞர்களின் புதிய எழுத்து வடிவமானது. அண்ணாவின் பேச்சே இளைஞர்களின் பேச்சாக உருமாறியது.
தமிழ் புத்தெழுச்சி பெற்றது. தமிழர்கள் தலைநிமிர்ந்தார்கள். வெறும் பழம்பெருமை மட்டும் பேசவில்லை அண்ணா. உலகம் முழுவதும் நிலவும் சமூக மாற்றங்களை, அறிவியல் கண்டுபிடிப்புகளை, புரட்சிகளை, ஜனநாயகத்தை தமிழர்களுக்கு தனது எழுத்துகளில் படம்பிடித்துக் காட்டினார்.
அண்ணாவின் தமிழ் அறிவுத் தமிழாக, அறிவியல் தமிழாக இருந்தது. தமிழ்ச் சமூகம் அறிவுச் சமூகமாக மாறியது. அவருடைய எழுத்துகளை தலைப்புவாரியாக தொகுக்கும் முயற்சியில் இது அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு.
அந்த மாபெரும் தமிழ்மகன் எழுதிய நாடகங்கள், சிறு நாடகங்கள் அனைத்தையும் ஒரே நூலாகத் தொகுத்து, இன்றைய இளம் தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் வழங்குவதில் சிபி பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது.
-அ.சோழராஜன்





Reviews
There are no reviews yet.