Description
பெருங்கடலில் சிறு துளிகள் போல, இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் என்பதே உண்மை. ஆம் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவரான புதுமைப்பித்தனும், நா.பார்த்தசாரதியும், மு.வரதராசனும் எழுதிக் குவித்தவை ஏராளம்.
மூவருமே நன்கு படித்தவர்கள். புதுமைப் பித்தனின் தந்தைக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால், தந்தை தாசில்தார் என்பதால் அவர் பணிபுரிந்த இடமான திருப்பாதிரிப்புலியூரில் 1906ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பிறந்தவர். தந்தை பணிபுரிந்த இடங்களில் எல்லாம் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தவர். தந்தை ஓய்வு பெற்றதும் நெல்லையில் படிப்பைத் தொடர்ந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
1933ல் இவருடைய முதல் படைப்பு வெளியாகியது. அதையடுத்து, சென்னைக்கு குடிபெயர்ந்த இவர், மணிக்கொடி இதழில் தொடர்ந்து எழுதினார். இவருடைய சிறுகதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
முற்போக்கு சிந்தனை கொண்ட இவர் பாசிச எதிர்ப்பிலும், கம்யூனிஸ ஆதரவிலும் உறுதியாக இருந்தார். ஆனாலும், பின்னாளில் அவருடைய சிறுகதைகளில் சில தலித் மக்களைச் சிறுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனாலும், அவருடைய சிறுகதைகளும், மொழி பெயர்ப்பு சிறுகதைகளும் அவர் வாழ்ந்த காலத்தை பிரதிபலிப்பவையாக கருதப்படுகின்றன.
காலத்தால் இவருக்கு அடுத்தபடியாக வருபவர் மு.வரதராசனார். இவர் 1912ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்தார். 1928ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பைத் தேறி, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது 16 வயதில் கிளெர்க்காக பணிசெய்தார். அப்போது அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பணியிலிருந்து விடுபட்டு சொந்த ஊருக்கு வந்தார். அங்கு ஒரு தமிழாசியரிடம் கற்று, 1931ல் தமிழ் வித்வான் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து தாமாகவே கற்று, 1935ல் வித்வான் தேர்வில் தேர்ச்சி பெற்றார். திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராக மூன்று ஆண்டுகள் பணிசெய்தார்.
1939ல் சென்ன பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். அப்போதிருந்து அவருடைய எழுத்துப் பணி தொடங்கியது. எழுத்துத் துறையில் இவர் தடம்பதிக்காத பிரிவுகளே இல்லை. சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்புகள், இலக்கணம், நெடுங்கதை, சிறுகதை, தமிழ் ஆய்வுகள், இலக்கிய ஆய்வு, கடித இலக்கியம், பயண இலக்கியம் என்று எழுதிக் குவித்திருக்கிறார்.
மூன்றாவதாக நா.பார்த்தசாரதி. இவர், சிவகாசி அருகே உள்ள நரிக்குடி என்ற ஊரில் 1932ல் பிறந்தவர். முறையாக தமிழ் கற்றவர். பின்னர், மதுரை தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து தமிழ் பண்டிதர் பட்டம் பெற்றார்.
1977-79ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலைநேர வகுப்பில் சேர்ந்து தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இவர், கல்கி ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் தீபம் என்ற பத்திரிகையை தொடங்கி நடத்தினார். அதன்காரணமாக தீபம் பார்த்தசாரதி என்று அழைக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த அறிஞர்கள் மூவர் எழுதிய முத்தான சிறுகதைகளை தேர்வு செய்து இந்த நூலில் தொகுத்திருக்கிறேன். இந்தக் கதைகளுக்கு ஓவியர் ஸ்ரீரசா சிறப்பான ஓவியங்களை தீட்டியிருக்கிறார்.
வாசகர்களுக்கு இது மூன்று வகையான விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்.
-ஆதனூர்சோழன்





Reviews
There are no reviews yet.