அ.தி.மு.க. - அரசியல் - ஆதனூர் சோழன் - எம்.ஜி.ஆர். - கலைஞர் - சசிகலா - ஜெயலலிதா

எம்ஜிஆரை மிரட்டித்தான் அதிமுகவில் ஜெயலலிதா நுழைந்தார் – ஆதனூர் சோழன்

ஆம், 1981ல் குமுதத்தில் அவர் எழுதிய சுயவாழ்க்கைத் தொடரில் சோபன் பாபுவுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததை குறிப்பிட்டு எழுதினார். எம்ஜிஆருக்கும் தனக்குமான உறவு குறித்து அடுத்த வாரத்தில் இருந்து சொல்வேன் என்று முடித்தார். ஆனால், அடுத்தவாரம் அநத் தொடர் நிறுத்தப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, 1982ல் ஜெயலலிதா அதிமுகவில் இணைக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த அதிமுக மாநாட்டில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் ஜெயலலிதா பேசினார். அதைத் தொடர்ந்து அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த அளவுக்கு ஜெயலலிதாவை திட்டமிட்டு தயார் செய்தது துக்ளக் சோவும் அவரைச் சேர்ந்தவர்களும்தான் என்ற பேச்சு இருந்தது. குமுதத்தில் எழுதத் தொடங்குவதற்கு முன் உலகமகா மேதைபோல தான் படித்த புத்தகங்களைப்பற்றி ஜெயலலிதாவை தனது துக்ளக் இதழில் தொடர்ந்து எழுதச் செய்தார். அதாவது அவரே எழுதிக்கொடுத்தார் என்றுகூட சொல்லலாம்.

அதற்கு சிலகாலம் முன்னர்தான், காளிமுத்துவை எம்ஜிஆர் பாராட்டியிருந்தார். அதிமுகவில் முக்கிய பொறுப்புக்கு வரத் தகுதிவாய்ந்தவர் தம்பி காளிமுத்து என்று கூறியிருந்தார். காளிமுத்து கைக்கு அதிமுக போகும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், ஜெயலலிதா அதிமுகவுக்குள் நுழைக்கப்பட்டார்.

காளிமுத்து கைக்கு போனால் அதிமுக திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சியாக மாறிவிடக்கூடும் என்று பயந்த ஒரு கூட்டமே ஜெயலலிதாவை திட்டமிட்டு அதிமுகவுக்குள் நுழைப்பதில் வெற்றி பெற்றதாக ஒரு கருத்து நிலவியது.

அதிமுகவில் ஜெயாவின் கை படிப்படியாக ஓங்கியது. ஆனால், ஜெயாவின் வரவுக்குப் பிறகுதான் எம்ஜிஆர் கிட்னி செயல்பாடு இழந்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அந்தச் சமயத்திலேயே கட்சிக்குள் தனது ஆதரவாளர்களாக சிலரை ஜெயலலிதா தயார் செய்தார். ஆனால், எம்ஜிஆர் திரும்பிவந்து வாய்பேச முடியாத நிலையிலும் முதல்வராக பொறுப்பேற்றார்.

அந்தச் சமயத்தில்தான் எம்ஜிஆரைப் பற்றி ராஜிவுக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா. இதையறிந்த எம்ஜிஆர் ஜெயலலிதாவை ஒதுக்கி வைத்திருந்தார். கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். அவர் மரணமடையும்வரை ஜெயலலிதாவின் நிலை இதுதான்.

எம்ஜிஆர் திடீரென இறந்ததும் ஜெயலலிதா எம்ஜிஆர் தலைமாட்டில் நின்று தன்னை போகஸ் செய்துகொண்டார். விதிமுறைகளை மீறி ராணுவ வாகனத்தில் ஏற முயன்று, கீழிறக்கப்பட்டார். அதைவைத்தே அரசியல் செய்தார். தன்னை கீழே தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டினார். எம்ஜிஆருடன் உடன்கட்டை ஏற நினைத்ததாக பேட்டி அளித்தார். கட்சியினர் மத்தியில் அனுதாபத்தை சம்பாதிக்க முயற்சித்தார்.

யதார்த்தத்துக்கு மாறான அவருடைய இந்த நடவடிக்கைகள் குறித்து யாரும் கேள்வி எழுப்பவே இல்லை. எம்ஜிஆர் மறைவுக்குப்பிறகு கட்சி எம்எல்ஏக்கள் அவருடைய மனைவி ஜானகியை முதல்வராக தேர்வு செய்தனர். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உதவியோடு கட்சியை உடைத்தார். அதிமுக அரசாங்கத்தையே கவிழ்த்தார். 1989ல் நடைபெற்ற தேர்தலில் கட்சியின் சின்னமே முடக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *