ஆதனூர் சோழன் - நல்ல அம்மா நல்ல பிள்ளை – 3 - மகளிர் பகுதி

நல்ல அம்மா நல்ல பிள்ளை – 3 – ஆதனூர் சோழன்



குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்?

பள்ளிக்கூட பஸ்ஸிலிருந்து இறங்கினான் சரண். மகனிடமிருந்து பேக்கை வாங்கித் தோளில் போட்டாள் சரஸ்வதி. பிறகு அவனை இடுப்பில் தூக்கி வைத்து நடந்தாள்.

அவ்வளவுதான்.

“அம்மா இனிமேல் திவ்யா பக்கத்தில் நான் உக்கார மாட்டேன். எப்பப் பார்த்தாலும் கிள்ளிக்கிட்டே இருக்கா. தருண்கிட்ட இன்னிக்கு நான் “கா” விட்டுட்டேன். வசந்தி டீச்சர் ரொம்ப மோசம்…”

சரண் அடுக்கிக் கொண்டே போனான்.

சரஸ்வதிக்கு அவனுடைய பேச்சில் கவனம் இல்லை. வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கிறது.

அதைப்போய் முதலில் சரி செய்ய வேண்டும் என்ற நினைப்புதான் ஓடிக்கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் சரண் பேசுவதை நிறுத்தி விட்டான்.

அவன் முகம் “உம்”மென்று ஆகிவிட்டது.

வீட்டுக்கு வந்ததும் மகனை இறக்கிவிட்ட சரஸ்வதி,

“யூனிபார்மை கழட்டு. நான் பால் கொண்டுவர்றேன்…” என்றாள்.

சரணிடமிருந்து எந்த பேச்சும் வரவில்லை.

மகன் பேசாமல் இருப்பது குறித்து சரஸ்வதி எவ்விதமான அக்கறையும் காட்டவில்லை.

இது நல்லதா?

இல்லை என்கிறார்கள் மனோவியலாளர்கள்.

குழந்தைகளைப் பேசவிட்டு அழகு பார்ப்பதே தனியான சுகம் என்கிறார்கள்.

தான் சொல்வதையும் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்ற மனப்பான்மையை குழந்தையிடம் உருவாக்க வேண்டியது அவசியம். அப்படி பேசும்போது, அவன் செய்த தவறுகளும் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. பேச்சோடு பேச்சாக அவனுடைய தவறுகளையும் சுட்டிக்காட்ட பெற்றோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“குழந்தயை நன்றாக படிக்க வைத்து விட்டால் போதும். எந்த கவலையும் இல்லை”

“குழந்தையின் படிப்புக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வோம்”

“குழந்தையின் படிப்பு செலவுக்காக வேறு எந்த செலவையும் சுருக்கிக் கொள்வோம்”

எல்லா பெற்றோரும் இப்படித்தான் சொல்வார்கள்.

ஆனால், நமது பிள்ளைகளை நான்றாக படிக்க வைப்பதற்கு நிஜத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

இதுபற்றிய சிந்தனை பெரும்பாலான பெற்றோரிடம் இருப்பதில்லை.

குழந்தைகள் கேட்கும் புத்தகத்தை வாங்கிக் கொடுப்போம். கல்வி கட்டணத்தை கட்டுவோம்.

தினமும் அவர்களை தயார்செய்து பள்ளிக்கு அனுப்புவோம். அத்துடன் கடமை முடிந்து விட்டதாக நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறோம்.

உண்மையில் அதோடு நமது கடமைகள் முடிவதில்லை. பள்ளியில் குழந்தை சரியாக படிக்கிறாரா? இல்லை எனில் ஏன்? என்ன பிரச்சனை? என்பதை அறிந்து, பிரச்சனை இருந்தால் அதை களைய முயற்சிக்க வேண்டும்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *