இவர் சொந்தப் பெயர் செல்லையா தனபாலசிங்கம்! இவரது இயக்க பெயர் மாதவன்
இவரது செல்லப்பெயர் செட்டி
இலங்கை போராட்ட வரலாற்றை எழுதும் எவரும் தப்பி தவறியும் மறந்து விட கூடாத பெயர்தான் செட்டி தனபாலசிங்கம்!
அத்தனை ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் இவர்தான் முன்னோடி.
இலங்கை அரசுக்கு எதிரான கொரில்லா போர் முறைக்கும் இவர்தான் முன்னோடி.
இலங்கை தமிழர்களின் ஜனநாயக அரசியல் தோல்வியை நோக்கி செல்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டு,
அது ஆயுத போராட்டமாக மாற வேண்டும் என்று இளைஞர்கள் கருதி கொண்டிருந்த காலக்கட்டங்களில் அதன் முதல் அடியை எடுத்து வைத்தவர் திரு செட்டி தனபாலசிங்கம் அவர்கள்தான்
இவர் ஏற்கனவே மிக இளமையில் தவறான வழியில் சென்று சிறு சிறு குற்றங்களுக்காக பிடிபட்டு சிறுவர் நன்னடத்தை பள்ளிக்கூடங்களில் இளமை காலத்தை கழித்தார்
அதன் காரணமாகவோ என்னவோ ஊரில் ஒரு வித்தியாசமான இளைஞனாக வலம் வந்தார்.
இவரது ஊர் கல்வியங்காடு!
பிற்காலத்தில் பெரும் போராட்ட நகர்வுகளாக கருதப்பட்ட பல வீர தீர செயல்கள் எல்லாம் இவரின் காலத்தில் சட்டவிரோத நடவடிக்ககைகளாக கருதப்பட்டன.
பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது அவரருக்கு மாலை மரியாதையை அளித்தார் நல்லூர் பிரதேச சபை தலைவரான திரு குமரகுலசிங்கம் அவர்கள்
இதன் காரணமாக அவர் சுட்டு கொல்லப்பட்டார் .
இந்த கொலையில் செட்டி தனபாலசிங்கமும் சந்தேக நபராக கருதப்பட்டார்.
இதற்கு உபயோகப்படுத்திய டாக்சியின் சாரதியும் கொல்லப்பட்டார்
மிக மோசமான கொலைகள்.
தமிழ் பகுதிகளில் நடந்த முதல் அரசியல் படுகொலை இதுதான்
இதன் பின்புதான் அல்பிரட் துரையப்பாவின் கொலையும் நடந்தது
திரு குமரகுலசிங்கம் அவர்களின் கொலைதான் திரு அல்பிரட் துரையப்பா கொலைக்கு முன்னோடி என்று எண்ணுகிறேன்
ஏனெனில் இந்த இரண்டு தலைவர்களின் கொலைகளாலும் பலனடைத்தவர்கள் தமிழரசு கட்சியினர்தான்.
அடிக்கடி போலீசால் கைது செயப்படுவதும் பின்பு ஏதாவதொரு வழியில் வெளிவருவதுமாக சிக்கல்கள் நிறைந்தது செட்டியின் வாழ்க்கை.
போலீஸ் மீதான தாக்குதல்கள் வங்கிகள் அடைவு கடைகள் மீதான தாக்குதல்கள் அரசுக்கு எதிரான சிறு சிறு குழுக்களுக்கு நிதி உதவி செய்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் ஆரம்ப கால கிளர்ச்சியாளர்கள் எல்லோருக்கும் ஒரு கார்ட் பாதர் God Father போன்று செயல்பட்டார்.
இவரிடம் பல திறமைகள் உண்டு
எந்த இயந்திரத்தை சிறு வயதிலேயே முற்று முழுதாக கழட்டி மீண்டும் பொருத்தி விடுவார்
இவர் காரோட்டும் போது அது ஒரு ஹெலிகாப்டர் போல பறக்கும்
அதன் காரணமாகவே பல தடவைகள் போலீசிடம் இருந்து தப்பி உள்ளார்.
இவருக்கும் ஈழவிடுதலை போராட்டத்திற்கும் எப்படி ஒரு நெருக்கம் உண்டானது என்பது கொஞ்சம் சிக்கல் நிறைந்த கேள்வியாகும்.
திரு எஸ் ஜெ வி செல்வநாயகமும் திரு எஸ் டபுள்யூ ஆர் டி பண்டாரநாயகவும் தங்களின் தேர்தல் வெற்றிகளுக்காக ஊட்டி ஊட்டி வளர்த்த இனவாத சூழலில் செட்டி வளர்ந்தார்.
அதுவும் குற்ற பின்னணி காரணமாக சட்டத்தின் பிடியில் அடிக்கடி சிக்குவதால் ஒரு சட்டமீறல் சுபாவம் இவருக்குள் விதைக்கப்பட்டிருக்கலாம்
மேலும் அப்போதெல்லாம் தமிழ் பகுதிகளில் ஏராளமான சிங்கள போலீசாரே கடமையில் இருப்பார்கள்,
அதுவும் இவரை அரசின் சட்டங்களுக்கும் ஆட்சிக்கும் எதிரியாக இவரை உருமாற்றி இருக்கலாம்.
அன்றைய யாழ்ப்பாண சூழலில் அரச எதிர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாக எல்லோர் மனதிலும் இருந்தது.
ஆனால் மக்கள் பொதுவாக சட்டங்களை மிகவும் மதித்து அல்லது சட்டத்திற்கு மிகவும் பயந்துதான் வாழ்ந்தார்கள்.
குறிப்பாக பிரதமர் ஸ்ரீ மாவோ அம்மையார் போலீஸ் இலாகாவில் தமிழர்களை அடியோடு புறக்கணித்தார்
தமிழ் பகுதிகளுக்கு பணியாற்ற வரும் சிங்கள போலீசாருக்கு தமிழ் தெரியாது
சாதாரண தமிழர்களுக்கு சிங்கள போலீஸ் என்ற பயம் இருந்தது.
இந்த பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்விக்கு பதிலாக காலம் செட்டி தனபாலசிங்கம் என்ற இளைஞனை பொதுவெளிக்கு கொண்டு வந்தது.
அவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு இலகுவாக பதில் கூறிவிட முடியாது.
அவருக்குள் ஒரு ராபின் ஹூட் இருந்தார் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஏழைகளுக்கு வாரி வழங்குவதில் ஒருபோதும் அவர் பின்நின்றதில்லை
அதே சமயம் அவர் கொள்ளை அடிப்பதில் தனித்திறமையோடு இருந்தார் என்பதுவும் உண்மைதான்
அவரை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.
இவரின் அரச எதிர்ப்பு நடவடிக்கைகள்தான் பல இளைஞர்களை இவர் பால் ஈர்த்தது.
இவர் சேர்த்துக்கொண்ட குழுவுக்கு முதலில் புலிகள் என்றும் பின்பு தமிழ் புதிய புலிகள் என்றும் பெயர் வைத்திருந்தார்.
இவரின் சுவாரசியமான அனுபவ கதைகளின் மேல் எனக்கு பெரிய ஈர்ப்பு இருந்தது
ஒரு கட்டத்தில் என்னையும் தன் குழுவில் வந்து இணையுமாறு மிகவும் செல்லமாக கேட்டார்
அது மட்டுமல்ல நான் எதையும் துருவி துருவி கேட்பதை பாத்து நீ கொஞ்சம் வில்லங்கமான ஆள் என்றும் குறிப்பிட்டார்.
எனது நல்ல காலம் இவரின் போக்கு சரியில்லை என்று தோன்றியதால் இவரிடம் சிக்காமல் தப்பி விட்டேன்.
பின்பு இவரால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர் கூட்டத்தோடு கூட்டமாக இவரிடம் வந்து சேர்ந்தவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனும் .
வயதிலும் உருவத்திலும் சிறியவனாக பிரபாகரனை தம்பி என்று அழைத்து தனது எல்லா வித்தைகளும் அவருக்கு கற்று கொடுத்தார்.
செட்டி தனபாலசிங்கத்தின் வீட்டில்தான் பலநாட்கள் பிரபாகரன் தங்கி இருந்தார்.
இந்த விபரங்களை எல்லாம் முன்னாள் முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சதாசிவம் கனகேந்திரன் அவர்கள் தேசம் காணொளியில் தெளிவாக கூறியும் உள்ளார் .
இவர் செட்டி தனபாலசிங்கம் அவர்களின் நெருங்கிய உறவினருமாவார்
இவரின் தம்பி கப்டன் செல்லக்கிளிதான் திருநெல்வேலி தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்.
இந்த வெற்றிகரமான தாக்குதல் முடிந்த உடனேயே பிரபாகரன் மறைந்திருந்து செல்லக்கிளியை சுட்டு கொன்றார்
எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத பச்சை துரோகம் இது.
செட்டி தனபாலசிங்கம் நன்றாக சமைப்பார்
இவரிடம் இருந்துதான் பிரபாகரனும் சமையல் கலையை கற்றிருக்கிறார் என்றெண்ணுகிறேன்
ஏனெனில் பிரபாவும் செட்டியை போலவே நன்றாக சமைக்கவும் கூடியவர் என்று தெரிகிறது.
வல்வெட்டி துறையில் இருந்து கல்வியன் காட்டுக்கு ஓடிவந்த பிரபாவை அவரின் பெற்றோர்கள் தேடுவதில்லை
இது உருப்படாது என்று இவரை அவர்கள் கைகழுவி விட்டார்கள்.
பின்பு ஒரு கட்டத்தில் செட்டி மீண்டும் ஒரு கொள்ளை வழக்கில் தேடப்பட்டார்.
இவரின் குழுவினர் சிலர் அதில் பிடிபட்டு சிறைக்கு சென்றனர்
பிரபா உட்பட பலர் தப்பி விட்டனர்.
பின்பு செட்டியும் பிடிபட்டார் சில வருடங்கள் சிறையில் இருந்தார்
இந்த முறையும் ஏதோதோ சொல்லி சமாளித்து நன்னடத்தை பிணையில் வெளியே வந்தார்
ஆனால் இம்முறை வெளிவந்த பின்பு முற்று முழுதாக சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு தீர்மானித்தார்.
திருமணம் செய்து கொண்டு ஒரு நல்ல குடும்ப தலைவனாக வாழ்ந்தார்
இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.
இவரின் இரண்டாவது குழந்தை பிறந்து 12 ஆவது நாள் கல்வியன்காட்டு சந்தையில் காய்கறி போன்ற வீட்டு மளிகை பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
நீண்ட போராட்ட வாழ்க்கையில் மிகவும் சலிப்படைந்து எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு மிக சாதாரண வாழ்க்கை வாழ விரும்பினார்.
இவரின் விதி இவரை சத்தம் போடாமல் பின் தொடர்ந்து வந்தது .
மாலை சுமார் 6 மணியளவில் செங்குந்த இந்து கல்லூரியின் பின் வீதியில் வைத்து இவர் இவரின் சிஷ்யர்களாலும் நண்பர்களாலும் சுட்டு கொலை செய்யப்பட்டார்
இவரிடம் எல்லா உதவிகளையும் பெற்றுக்கொண்ட பிரபாகரனும் குட்டிமணியும் இவரை கொன்றார்கள்.
இவர் இறக்கும்போது இவரிடம் பெரிதாக பணம் இருக்கவில்லை.
இவரின் பணம் பல இயக்க போராளிகளிடமும் மேலும் பலரிடமும் சிக்கி கொண்டு விட்டதாக பொதுவெளியில் பேசிக்கொண்டார்கள்.
அண்மையில் பல போராளி தலைவர்களுக்கு சிலைகள் வைக்கவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்
அப்படி போராளி தலைவர்களுக்கு சிலைகள் வைக்க வேண்டும் என்றால் முதலில் சிலை வைக்கவேண்டியது புலிகள் இயக்க நிறுவனர் திரு செல்லையா தனபாலசிங்கம் என்கின்ற செட்டி தனபாலசிங்கத்திற்குதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.


