டைனோர்கள் என்றாலே ஜுராஸிக் பார்க் சினிமாவில் வரும் அந்த பயங்கரமான விலங்கைத்தான் கற்பனை செய்வார்கள்.
அதன் பெயர் டி.ரெக்ஸ். அதாவது டைரனோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex ) என்பதன் சுருக்கம்.
பொதுவாக டைனோசர்களின் காலம் 165 மில்லியன் ஆண்டுகள் என்கிறார்கள். அதாவது 16 கோடியே 50 லட்சம் ஆண்டுகள்.
பூமியின் பல்வேறு கால மாற்றங்களில் டிரையாசிக், ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் (Triassic, Jurassic, and Cretaceous) பருவங்களில் டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.
ஆனால், நம்மில் பெரும்பாலோர் டைனோசர்களின் காலத்தை ஒரே பருவமாகக் கருதுகிறார்கள்.
இவர்கள்தான், டைனோசர்கள் காலத்தில் மனிதர்களும் அவற்றோடு இணைந்து வாழ்ந்து திரிந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், நவீன மனிதர்களின் காலம் சுமார் 2 லட்சம் ஆண்டுகள் என மதிப்பிடப்படுகிறது. இந்த 2 லட்சம் ஆண்டுகளுக்குள்தான் மனிதன் இன்றைய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறான்.
ஆனால், முழு மனித இனத்தின் தோற்றத்தை கணக்கிட்டால் கூட 70 லட்சம் ஆண்டுகள் என மதிப்பிடுகிறார்கள். இந்த காலகட்டத்தில்தான் மனித இனம் பல கட்டமாக இன்றைய நவீன வடிவத்துக்கு மாறியிருக்கலாம் என்கிறார்கள்.
உண்மையில், நவீன மனிதர்களுக்கும் "டைனோசர்களின் ராஜா" என்று அழைக்கப்படும் ஸ்டெகோசரஸுக்கும் டைரனோசரஸ் ரெக்ஸ் ஆகியவை வாழ்ந்த காலத்துக்கும் இடைவெளி மிகவும் அதிகம்.
சுமார் 155 மில்லியன் முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு ஸ்டெகோசரஸ் என்ற வகை விலங்கு தற்போதைய வட அமெரிக்கா பகுதியில் சுற்றித் திரிந்தது.
அதன் சமகாலத்தில் இன்னொரு வகை டைனோசரான அல்லோசரஸும் வாழ்ந்தது.
சக்திவாய்ந்த பற்களைக் கொண்ட ஒரு பயங்கரமான உயிரினமாக அது இருந்தது.
இவற்றோடு ஒப்பிடும்போது, டி. ரெக்ஸ் எனப்படும் டைனோசர், சுமார் 680 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, கிரெட்டேசியஸ் காலத்தின் பிந்தைய பகுதியில்தான் தோன்றியது.
அதாவது முந்தைய இரண்டு டைனோசர் வகைகளுக்கும் இதற்கும் இடையில் சுமார் 800 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகே டி.ரெக்ஸ் தோன்றியதாக மதிப்பிடுகிறார்கள்.
660 லட்சம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்குதலில் டைனோசர் இனம் அழிந்தது என்கிறார்கள்.
ஆக, சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனத்தின் முன்னோருக்கும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருமாறத் தொடங்கிய நவீன மனிதர்களுக்கும், டைனோசர்களுக்கும் எப்படித் தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.